தமிழக செய்திகள்

ஓட்டல்களுக்கு இட்லி விற்கப்பட்டதாக புகார்: அம்மா உணவக ஊழியர்கள் டிஸ்மிஸ்

நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் அம்மா உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

புகார்

இந்த அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லி தனியார் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அங்கு சாப்பிட வருபவர்களுக்கு இட்லி கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் அம்மா உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அம்மா உணவுகளத்தில் உணவு வகைகள் பார்சல் வழங்க தடை விதித்ததார். மேலும், புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தி ருந்தார்

2 ஊழியர்கள் `டிஸ்மிஸ்’

இந்த நிலையில் அம்மா உணவகத்தில் பணியாற்றிய கங்கா, சங்கரேஸ்வரி ஆகிய 2 பேரும் `டிஸ்மிஸ்’ செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கையாக, அம்மா உணவகத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, பார்சல் வழங்கப்படாது என்றும், புகார் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் குறித்தும் அம்மா உணவகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சுகந்தி கூறுகையில், அம்மா உணவகம் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை மகளிர் சுய உதவி குழு மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த புகாரைத்தொடர்ந்து கங்கா, சங்கரேஸ்வரி 2 பேரும் மகளிர் சுய உதவிக்குழு தீர்மானம் மூலமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்