திருநெல்வேலி:
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மிச்சாங் புயலால் சென்னை நகரில் கடும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி ஆட்சி நிர்வாகம் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.