தமிழக செய்திகள்

நாளை கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய் - 32 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்

கலையரங்க மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக முதலமைச்சர் விஜய் நாளை கரூர் செல்கிறார். கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் அரசு பணி ஆணை வழங்க உள்ளார்.

முதலமைச்சர் விஜய் கரூர் வருகை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் நாளை கரூருக்கு வருகை தர உள்ளார். தொடர்ந்து அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் விஜய் நாளை காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் கரூர் புறப்படுகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கரூர் வருகிறார். அப்போது வழிநெடுகிலும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அவர் கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்காக கலையரங்க மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கரூர், மனவாசி பகுதியில் ரூ.1,700 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். தோல் அல்லாத (Non-Leather) காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் ரோடுஷோ

கரூரில் நாளை முதலமைச்சர் விஜய் 10 கி.மீ. ரோடுஷோ செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலீசார் பாதுகாப்பு

இதையொட்டி கரூரில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதலமைச்சரின் வாகனம் செல்லும் வழி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.