தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கைக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்ததால் த.வெ.க. தலைவர் விஜய்யை, முதலமைச்சராக நியமித்து கவர்னர் அர்லேகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, போதைப்பொருட்கள் தடுப்புப்படை ஆகிய 3 முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.
இதைத்தொடர்ந்து, தலைமை செயலகத்துக்கு சென்று பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டு அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், மாலை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது முதலமைச்சர் விஜய்க்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் சிலையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.
சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.
அவரை தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து மற்ற கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.