தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதலமைச்சர் விஜய் கண்டனம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்தபின் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்கத்தக்கதல்ல.

மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையை இன்று உயர்த்தியது தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களின் விலையை, குறிப்பாக லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3/- மற்றும் டீசல் ரூ.3/- என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதில்லை. மாறாக, லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன. 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருட்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இந்த விலை உயர்வு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். வங்கிக் கடன்பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும். இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனத்தின் வாடகை உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது அன்றாட பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்யும்.

குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால், சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.