சென்னை:
சென்னை கன்னிமாரா பொது நூலகம் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85 லட்சம் செலவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மாமேதை கார்ல் மார்க்ஸ் உருவச்சிலை நிறுவப்பட்டு உள்ளது.
உலக வரலாற்றில் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான பொதுவுடமை சிற்பி கார்ல்மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார்.
அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பி.சண்முகம், பாலகிருஷ்ணன், ராம கிருஷ்ணன், சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன், வீரபாண்டியன் உள்ளிட்டோரும் கார்ல் மார்க்ஸ் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் வீர வணக்கம், வீரவணக்கம் கார்ல் மார்க்சுக்கு வீர வணக்கம் என்று கையை உயர்த்தி முழக்கமிட்டனர்.
முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் பற்றிய புகைப்பட கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர். அங்கு வீடியோ தொகுப்பும் காண்பிக்கப்பட்டது. அதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் பார்வையிட்டனர்.
கார்ல் மார்க்ஸ் சிலையை வடிவமைத்த சிற்பி கார்த்திகேயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், பிரபாகரராஜா மற்றும் இந்து ராம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.