தமிழக செய்திகள்

ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழா மேடையில், 'நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று தனது முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் வழங்கிய பிரேமா பேசுகையில், தந்தை ஒழுகும் வீட்டில் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!

எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!

உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறியுள்ளார்.