தமிழக செய்திகள்

சேகர்பாபுவால் தான் பக்தர்கள் போற்றும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது - மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது. உண்மையான பக்தர்கள் தி.மு.க. ஆட்சியை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.

சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன், கே.என் நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்வீரராக திகழ்கிறார்.

* அடியார்க்கு அடியார் போல் உழைத்து கொண்டிருக்கும் சேகர்பாபுவால் தான் பக்தர்கள் போற்றும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது.

* முதலமைச்சராக நான் அதிக நிகழ்ச்சிகள் கலந்து கொண்டது இந்து சமய அறநிலையத்துறையில் தான்.

* இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

* அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 2,300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

* பல்வேறு கோவில்களக்கு பக்தர்கள் ஆன்மிக பயணத்திற்கு அழைத்து சென்றுள்ளோம்.

* 3,800-க்கு மேற்பட்ட திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து தி.மு.க. அரசு சாதனை படைத்துள்ளது.

* 41 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

* தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

* உண்மையான பக்தர்கள் தி.மு.க. ஆட்சியை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.

* பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடக்கூடியவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

* கேலிகள், விமர்சனங்களுக்கு ஒரு போதும் கவலைப்படுவதில்லை. மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடன் என்றார்.