சென்னை:
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த அன்புமணி, ராமதாஸ் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ராமதாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரை நேரில் சந்தித்து பேச முடியவில்லை என்று கூறினார்.
இதனிடையே, ராமதாசை உடன் இருந்து கவனித்து வருவதாகவும், உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார் என்றும் ஜி.கே.மணி கூறியுள்ளார். மேலும் ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பா.ம.க.நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்பிற்குரிய மருத்துவர் திரு. @drramadoss அய்யா அவர்களைச் சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்.அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன். pic.twitter.com/ZojzAEkDz2