தமிழக செய்திகள்

நெல் ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும்.தற்போதுள்ள 25 கிலோ எப்.ஆர்.கே. சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும்.

சென்னை:

தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது. 16.11.2025 நிலவரப்படி, நெல் கொள்முதல் கடந்த 2024-2025-ம் ஆண்டினுடைய 4.81 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்து உள்ளது. இது தமிழ்நாட்டின் வரலாற்றில் குறுவை (கரீப்) பருவத்தில் நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 16.11.2025 நிலவரப்படி 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 1,86,674 விவசாயிகளிடம் இருந்து 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை ரூ.3,559 கோடி வழங்கி கொள்முதல் செய்துள்ளது.

ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (16.11.2024 வரை), 1,095 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போதைய நெல் கொள்முதல் பருவத்தில் (31.08.2026 வரை) விற்பனைக்குரிய சந்தை உபரி நெல் 98.25 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி அடிப்படையில் இது 66.81 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இது தொடர்பாக, 8.8.2025 அன்று, கரீப் மார்க்கெட்டிங் சீசன் 2025-2026-க்கான அரிசி கொள்முதல் இலக்காக 20 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயிக்குமாறு ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு முன் மொழிவு பரிந்துரைக்கப்பட்டது.

தற்போது ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கே.எம்.எஸ். 2025-2026-க்கான அரிசி கொள்முதல் இலக்காக 31.3.2026 வரை 16 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயித்துள்ளது. நெல் சாகுபடியில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் சாதனை அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, கே.எம்.எஸ். 2025-2026-க்கான 16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இலக்கை, கரீப் பருவத்தின் கடைசியில் கொள்முதல் செய்யப்படும் மொத்த நெல் அளவிற்கேற்ப உயர்த்தி திருத்தம் செய்திட தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டாவதாக, காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக நிர்ணயிக்குமாறு தமிழ்நாடு அரசால் 19.10.2025 அன்று ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மூன்று குழுக்கள் 25.10.2025 முதல் 28.10.2025 வரை தமிழ்நாட்டில் களப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் மாதிரிகளை சேகரித்தன. ஆனால் தளர்வு தொடர்பான உத்தரவுகள் இன்றளவும் கிடைக்கவில்லை.

கரீப் (குறுவை) பருவ கொள்முதல் இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 16.11.2025 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது கொள்முதல் செய்யப்படும் நெல்லில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும்.

செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரிகள் எடுப்பதில் தளர்வு ஆணைகள் கோரி மாநில அரசு, 07.10.2025 அன்று 5 ஒப்பந்ததாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க உத்தரவு வழங்கியது. 16.11.2025 நில வரப்படி ஒப்பந்ததாரர்கள் 1,760 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, FoRTrace இணைய தளத்தில் 123 மாதிரிகளைப் பதிவேற்றியுள்ளனர். இதில் பதிவேற்றப்பட்ட 77 மாதிரிகளில், இதுவரை 33 மாதிரிகளுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மாதிரி முடிவை அறிவிக்க கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகின்றன. இந்தமுறை கால தாமதத்தை ஏற்படுத்தும்.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து பெறப்படும் கண்டுமுதல் அரிசியை நகர்வு செய்திடவும், அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் சம்பா (ரபி) பருவ நெல் கொள்முதலுக்குத் தேவையான இடத்தினை ஏற்படுத்திடவும் அதிக அளவு செறிவூட்டப்பட்ட அரிசி அரவைக்குத் தேவைப்படுகின்றன.

எனவே, தற்போதுள்ள 25 கிலோ எப்.ஆர்.கே. சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும். மாதிரி தொகுதி அளவை 10 எம்.டி.-இலிருந்து 25 எம்.டி ஆக பி.ஐ.எஸ். தரநிலைகளுக்கு (ஒரு தொகுதிக்கு 500 மூட்டைகள்) ஏற்ப அதிகரிக்க வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் எடுக்கப்பட வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை குறைந்து, இடப்பற்றாக்குறை நீங்கி, முடிவுகளை அறிவிக்கும் காலம் 12 நாட்களில் இருந்து 7 நாட்களாகக் குறையும். இது தொடர்ச்சியான நெல் அரவைக்கு வழிவகுக்கும்.

மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கி, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும்.

இப்பரிந்துரைகளை பரிசீலனை செய்து நெல் அரவை ஆலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் விநியோகத்தினை எளிதாக்கத் தேவையான உத்தரவுகளை பிறப்பித்திட வேண்டும். இதன்மூலம் சோதனை முடிவுகளைப் பெறுவதற்கான காலம் கணிசமாகக் குறையும் என்றும், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் கருதி இவ்விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவுகளை எடுத்திட வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.