முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக தருமபுரிக்கு வந்தார்.
இந்த நிலையில், ஒட்டப்பட்டியில் முரசொலி மாறன் 92-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, அதியமான் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி பி.எம்.பி. கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.512.52 கோடி மதிப்புள்ள 1,044 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.362.77 கோடி மதிப்புள்ள 1,073 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நகராட்சிகள் துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 70.427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.