தமிழக செய்திகள்

மிச்சாங் புயல் பாதிப்பு: நிவாரணப் பணியில் ஈடுபட தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் அழைப்பு

கனமழை ஓய்ந்துள்ள நிலையில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

சென்னை:

மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுபட தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிச்சாங் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT