தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கான +2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன. மொத்தம் 8.27 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.6 முதல் 20ம் தேதி வரை நடந்தது.
இதனைத்தொடர்ந்து நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது அரங்கேறி வரும் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி போன்ற அரசியல் சிக்கல்களால் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகாது என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அறிவித்தப்படியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.