அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.
இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* உலகம் முழுவதும் பேசும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்
* சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இரு பெயர்களும் பாரதத்தின் இரு பிரகடனங்கள்
* இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு
* சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது; சோழர்களின் கண்காட்சியை பார்த்து பிரமித்தேன். சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று
* பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள்.
* உலகின் வன்முறை, சுற்றுச்சூழல் பிரச்னைக்கு, தீர்வளிக்கும் பாதையை சைவ சித்தாந்தம் நமக்கு காட்டுகிறது.
* அன்பே சிவம் என்ற திருமூலரின் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் பிரச்னைகள் தானாகத் தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.