மதுரை மாவட்டம் அழகர்கோயில் பகுதியில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் அழகர்மலை அடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் கடந்த 28 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்நிலையில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் வேடமிட்டு இன்று மதுரைக்கு புறப்பட்டார் சுந்தராஜபெருமாள்.
கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மதுரை வரும் கள்ளழகரை வழிநெடுகிலும் மண்டபங்களில் வரவேற்று வழிபாடு நடத்தப்பட்டது.
வழிநெடுகிலும் பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா என பக்தி முழக்கம் எழுப்பி அழகரை வரவேற்று வழிபட்டனர்.
கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை மதுரை மூன்றுமாவடி பகுதியில் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.