தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக த.வெ.க. ஆட்சிக்கு வந்ததும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
அதன்படி தமிழ்நாடு முதல்-அமைச்சராக கடந்த மே 10-ந்தேதி பொறுப்பேற்றவுடன் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்குவதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பித்தார்.
விஜய்யின் நேரடி மேற்பார்வையில் இந்த சிறப்பு படை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அதிரடிப்படையின் தலைமை அதிகாரி யாக ஐ.ஜி. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
விழாவின் தொடக்கத்தில் முதலமைச்சருக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தொடர்ந்து விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் லச்சினையை விஜய் வெளியிட்டார். பின்னர் திட்டத்தை தொடங்கி சிறப்பு படையின் ரோந்து வாகனத்தையும் ஓட்டினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் உயர் காவல் அதிகாரிகளும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். முதலமைச்சர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகரும் கலந்துகொண்டார்.