தஞ்சாவூர்:
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சகோதரி மகள் திருமணம் நாளை (வியாழக்கிழமை) தஞ்சாவூர் மகாராஜா மகாலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த திருமணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது.
திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நாளை காலை 9 மணிக்கு தஞ்சாவூருக்கு வருகின்றனர்.
பின்னா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவா் ராமநாதன் ஆகியோரின் சிலைகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறாா். பின்னா் காா் மூலம் திருச்சி வழியாக சென்னைக்கு செல்கிறார். இதையொட்டி, காவல் அலுவலா்கள், காவலா்கள் ஏராளமானோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
முதலமைச்சரின் தஞ்சாவூர் வருகையையொட்டி நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. எனவே தடையை மீறி டிரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.