தமிழக செய்திகள்

இரட்டை வேடம் போடும் இ.பி.எஸ்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சட்டசபையில் திமுக, அதிமுக இடையே இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, திமுக, அதிமுக இடையே இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. இறுதியில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மத்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில், திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டசபையில் இன்று இபிஎஸ் கடும் குற்றச்சாட்டை பதிவு செய்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக அம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது.

கடந்த, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுக எம்.பி. தம்பிதுரை, இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அவையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு தற்போது வெளிவந்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.

சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்…

தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.