மீனவ சகோதரர்களே, சகோதரிகளே தலைமைச் செயலகம் விஷயத்தில் இன்னும் முதலமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமைச் செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா? என்றால் கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் எங்கள் முதலமைச்சர் நிற்பார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கம்யூனிஸ்டு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் நடந்தபாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்து பேசியதாவது:-
தலைமைச் செயலகம், செக்ரடரியேட் அதை எல்லோரும் அரசியல் ஆக்குகிறார்கள். நாம் அதை செய்துவிடுவோம், இதை செய்துவிடுவோம் என்று பேசுகிறார்கள். பொதுவாக ஒரு திட்டம் அறிவிக்கும் போது அதற்கான இடம்குறித்து விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) பெறுவது வழக்கம். அதன் பிறகுதான் இடத்தை தேர்ந்தெடுப்போம். எனவே அந்த ரிப்போர்ட் வந்த பிறகுதான் அதை அங்கு கட்டலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வார் முதலமைச்சர்.
எனவே மீனவ சகோதரர்களே, சகோதரிகளே தலைமைச் செயலகம் விஷயத்தில் இன்னும் முதலமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமைச் செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா? என்றால் கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் எங்கள் முதலமைச்சர் நிற்பார்.
இன்னொன்று சொல்கிறேன். ஜெயித்து முடித்த பிறகு அவர் தி.மு.க., அ.தி.மு.க. என்று பார்ப்பது கிடையாது. எல்லோருக்கும் நல்லது செய்யுங்கள் என்கிறார். சட்டசபையில் தி.மு.க.வினர் அன்றைக்கு திடீரென சபாநாயகர் முன்பு தர்ணா செய்ததை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். தர்ணாவில் ஈடுபட்ட ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வால் தரையில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. அவர் பாவம் என்று முதலமைச்சர் விஜய் கை கொடுத்து தூக்கி விட்டார்.
நமது முதலமைச்சரை எதிர்த்து தி.மு.க. போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்களை கைதூக்கி விடுகிறார். இதுதான் எங்கள் அண்ணன். இவ்வளவு தான் எங்கள் அரசியல். பழி வாங்கும் அரசியல் எங்களுக்கு இல்லை. கம்யூனிஸ்டுகள் நம்மைப் பற்றி பேசுவது வருத்தமாக உள்ளது.
தி.மு.க. ஆட்சி நடந்த போது தி.மு.க.வினர் கமிஷன் வாங்கினார்களா? இல்லையா? என்பதை கம்யூனிஸ்டு கட்சியினர் மனசாட்சியோடு சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.