தமிழக செய்திகள்

உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல்

சிறுமி வெண்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.சிறுமியின் பெற்றோரான கவுன்சிலர் சந்தோஷ், அவரது மனைவி சுகன்யா ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கோவை:

கோவை தெலுங்குபாளையம் ராமசாமி கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் சந்தோஷ். மாநகராட்சி 73-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும், நகரமைப்பு குழு தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி சுகன்யா. இவர்களது மகள் வெண்பா(வயது8).

இந்த நிலையில் சிறுமி வெண்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமி மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதனை டாக்டர்கள் கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் தங்களது மகள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

இந்த நிலையில் கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல் உறுப்பு தானம் செய்த சிறுமி வெண்பாவின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு சிறுமியின் பெற்றோரான கவுன்சிலர் சந்தோஷ், அவரது மனைவி சுகன்யா ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவருடன் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உடனிருந்தனர்.