சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் ரூ.151 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 20 புகார்கள் பரிசீலனையில் உள்ளது. மீதமுள்ள அனைத்து புகார்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவிற்குள் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை வழங்கும் பணியை விரைவுபடுத்தி உள்ளோம்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.