

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
நேற்று மாலை 4 மணிக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.
மேலும் எம்.எல்.ஏ., எம்.பி. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன.
மேலும் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையும் உடனடியாக தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கும் நோக்கில் எடுத்துச் செல்லப்படும் பரிசுப்பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள்.
தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில்அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளாக இருக்கும் கலெக்டர்கள் நேரடியாக களமிறங்கினர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை உடனடியாக வாகன சோதனையில் ஈடுபட உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் உதவியுடன் சோதனையை தொடங்கினர்.
நகரின் முக்கிய சந்திப்புகளில் நின்று அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை மறித்து பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரும், துணை ராணுவ படையினரும் துப்பாக்கி ஏந்தியபடி நின்று பாதுகாப்பு அளித்தனர்.
இரவு விடிய விடிய சோதனை நடந்தது. பல இடங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்பட்ட பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை கருவூலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.
தொடர்ந்து இன்று காலையிலும் பறக்கும் படை அதிகாரிகள் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தினர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, நாகர்கோவில் என பல இடங்களில் இன்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 2,016 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று மாலை முதல் சோதனையை தொடங்கி உள்ளனர்.
வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தால் கொண்டு செல்லலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் எடுத்துச் செல்வோர் அதற் கான ரசீதுகளை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனாலும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த பங்கஜ் என்பவர் பெரும் தொகையை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. சோதனையில் அவரிடம் ரூ.35 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
பறக்கும் படை அதிகாரிகள் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களை கேட்டபோது, பங்கஜிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி அந்த 35 லட்சம் ரூபாயையும் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 35 லட்சமும் பாதுகாப்பாக திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருப்பூர் குமரன் சாலையில் இன்று காலை பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக ரூ.6 லட்சம் பணம் இருந்தது.அதனை பொள்ளாச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கொண்டு வந்தார். அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் இன்று பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ஒரு காரில் 25 சில்வர் தட்டுகள் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் வாக்காளர்களுக்கு பரிசாக கொடுக்கும் நோக்கில் அவை கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்ற நோக்கில் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூரில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து பெருந்துறையை நோக்கி தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வேனை இன்று காலை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர்.
வேனில் இருந்த கர்நாடக மாநிலம் பசுவநாபுரத்தை சேர்ந்த மகாதேவ்(38) என்பவரிடம் ரூ.53,200 பணம் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சேலத்தில் இருந்து சுவாமிமலை நோக்கி சென்று கொண்டிருந்த விவேகானந்தர் என்பவர் ஓட்டி வந்த காரை தணிக்கை செய்தபோது எந்தவித ஆவணங்களும் இன்றி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை தோட்டக்கலை அலுவலர் கோகுல பிரியா தலைமையிலான பறக்கும் படையினர் பாளை தியாக ராஜ நகர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து பாலாஜி என்பவர் காரில் வந்தார். அவரை சோதனை செய்தபோது அவரிடம் ரூ.1.40 லட்சம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பணம் பாளை தாசில்தார் இசக்கி பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் இருங்கலா குறிச்சி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் தனது காரில் ஆத்தூர் நோக்கி சென்றார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அவரது காரை நிறுத்தி பறிக்கும் படையினர் சோதனை நடத்தினார்கள்.
வேல்முருகன் கொண்டு வந்த பையில் ரூ.12 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அந்த பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராஜேஷ் இன்று காலை ஆரணி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக லோடு ஆட்டோவில் வந்தார். அப்போது அவரிடம் ரூ. 75 ஆயிரத்து 500 இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வளையாத்துரை சேர்ந்த புகழ் இன்று காலை தனது மோட்டார்சைக்கிளில் ஆரணி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்பங்தாங்கள் கூட்ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் புகழை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பையில் ரூ.1 லட்சம் இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள ஜூஜூ வாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் விதிமுறைக்குட்பட்டு எந்தவித பொருட்களையும் எடுத்து வர அனுமதிக்கப்படுவதில்லை.
இரு மாநிலங்களுக்கும் இடையே இயக்கப்படும் கார் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடத்திய பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
சென்னையில் பறக்கும் படையினருடன் இணைந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்கள் தலைமையில் இந்த வாகன சோதனை நடைபெற்றது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று காய்கறி ஏற்றி சென்ற லாரி, வேன், மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னையில் பல இடங்களில் கார்கள் மற்றும் மினி லாரிகளை மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். பார்சல் கொண்டு சென்றவர்களிடம் என்ன பார்சல் என்று பரிசோதனை செய்தே அனுப்பினார்கள்.
மேலும் மோட்டார் சைக்கிள்களையும் வழி மறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள்களில் உள்ள பெட்டி, இருக்கைகளுக்கு அடியில் பொருள் வைக்கும் இடம் ஆகியவற்றையும் திறந்து பார்த்தனர்.
சென்னை மாநகர பகுதிகள், தாம்பரம், ஆவடி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இனிவரும் நாட்களில் சோதனை தீவிரம் அடைய உள்ளது.