தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். குறிப்பாக வெளியூரில் வசிக்கும் நபர்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊருக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இதனால் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பஸ் கிடைக்காமல் பயணிகள் அலைமோதும் சூழல் ஏற்பட்டது. திண்டுக்கல், தேனி மாவட்டத்திலும் பல இடங்களுக்கு பஸ் கிடைக்கவில்லை.
பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. கொடைக்கானலைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் சென்னையில் வசித்து வந்தனர்.
அவர்கள் வாக்களிப்பதற்காக கடும் சிரமத்துடன் அங்கிருந்து புறப்பட்டு வந்தனர். கடும் போக்குவரத்து நெரிசல், பஸ் தட்டுப்பாடு ஆகியவற்றை கடந்து 15 மணி நேர பயணத்துக்கு பிறகு கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு மாலை சரியாக 6 மணிக்கு வந்தனர்.
ஆனால் வாக்களிக்கும் நேரம் முடிந்து விட்டது என கூறி அந்த மையத்தின் கேட் அடைக்கப்பட்டது. மேலும் அந்த இளைஞர்கள் தங்கள் நிலையை எடுத்து கூறியும் தேர்தல் அலுவலர்கள் கேட்கவில்லை. இதனால் கடும் சிரமத்துடன் சொந்த ஊருக்கு லக்கேஜூடன் வந்த 2 பேரும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.