சென்னை போலீஸ் கமிஷனர் ஆக பொறுப்பேற்ற அமல்ராஜ் சட்டம்- ஒழுங்கை காப்பதற்கும், குற்ற செயல்களை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
அதே நேரத்தில் போலீஸ் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையில் வகுக்கப்பட்டுள்ள நெறி முறையின்படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையில் அலுவலக வாகனங்கள், உபகரணப் பைகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஆய்வுக்காகக் காட்சிப்படுத்த வேண்டும்.
ஆனால், பெரும்பாலும் வார நாட்களில் பணியில் இருப்பதால், சென்னை மாநகரில் இந்த நடைமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
காவல்துறையில் உள்ள ஆயுதக் காப்புப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவுகளில் இந்த நெறிமுறை பின்பற்றப் பட்டாலும், பல ஆணையரகங்களிலும் மாவட்டங்களிலும் இது முறையாக செயல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் தான் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பொறுப்பேற்ற பிறகு 19-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அப்போது தான் காவல் நிலையங்களை தூய்மையாக வைக்க வேண்டும் அது நமது கடமை என்று அறிவுறித்தியுள்ளார்.
சென்னை மாநகரில் 105 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களும், 105 குற்ற பிரிவு காவல் நிலையங்களும், 39 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அதன் வளாகத்தை தூய்மைபடுத்துவதற்காக துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் பல காவல் நிலையங்களில் முறையான தூய்மைப்பணிகள் மேற்கொள்ளாமல் காவல் நிலைய வளாகம் முழுவதும் குப்பை மேடாக காட்சியளித்தது.
இந்நிலையில் நான் அடிக்கடி பார்வையிடுவேன், அப்போது தூய்மையாக இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறித்தியுள்ளார்.
இதன்படி நேற்று காலை சென்னையில் உள்ள 15 போலீஸ் நிலையங்களில் துப்புரவுப் பணியாளர்களுடன் சேர்ந்து அதிகாரிகளும் காவல்நிலையங்களை சுத்தம் செய்தனர்.