சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கள ஆய்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களுடன் சக பயணியாக ரெயிலில் பயணம் செய்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.
தலைமைச் செயலகத்தில் அன்றாடப் பணிகளை முடித்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தார். அங்கு தானே டிக்கெட் பெற்றுக்கொண்டு ரெயிலில் ஏறினார். அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணிகளுடன் சேர்ந்து பயணித்த அவர், மக்களிடம் உரையாடினார். முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
கிண்டி கத்திப்பாரா பகுதியில் சுமார் 101 அடி உயரத்தில், 1,354 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ரெயில் பாதையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டு மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றுப் பார்வையிட்டார்.
ஆய்வின் நிறைவாக, மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் அனைத்தையும் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.