தமிழக முதலமைச்சர் விஜய் இன்று எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் உயர் அரசு அதிகாரிகள், மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.
மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்ற முதலமைச்சர், அங்கிருந்த தலைமை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். தாய்-சேய் நல சேவைகள் மற்றும் மகப்பேறு மருத்துவ சிகிச்சைகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.
உள்நோயாளிகள் பிரிவு மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், மருந்து மாத்திரைகளின் தரம் குறித்து நேரடியாகக் கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.
ஏழை, எளிய பொதுமக்களுக்குத் தரமான, பாதுகாப்பான மற்றும் மிக விரைவான மருத்துவச் சேவைகள் தங்கு தடையின்றிக் கிடைப்பதைச் சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.