தமிழக செய்திகள்

மீண்டும் மீண்டுமா! சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து

மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடற்கரை-தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 8 மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த நேரத்தில் கடற்கரை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில்கள் ரத்து

சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சோி பணிமனையில் இன்று, 13, 15 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணி முதல் மாலை 5.40 மணி வரையில் (4 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, மாலை 3, 4.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு ரெயில்கள்

* மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடற்கரை-தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து மதியம் 2.30, மாலை 3.15, 4, 5.24 ஆகிய நேரங்களில் கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.