மாம்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதையடுத்து கோயம்பேடு பழ மார்க்கெட்டில் மாம்பழம் அதிகளவில் குவிந்து விற்பனை களை கட்டி உள்ளது.
தெருவோரங்களிலும் வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். மாம்பழங்களை சில வியாபாரிகள் ரசாயனம் வைத்து பழுக்க வைப்பதால் அதனை சாப்பிடுபவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரசாயனம் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இந்த நிலையில் அங்காடி நிர்வாக குழு அதிகாரி தலைமையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 5 கடைகளில் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 100 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து ஒரு கடைக்கு தலா ரூ. 1000வீதம் அபராதம் விதித்தனர்.