தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு

தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சுற்றி உள்ள கிராமங்களில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்து 3 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சுற்றி உள்ள கிராமங்களில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் குற்றபின்னணி உள்ளவர்களா? என்ற எந்த விபரமும் தெரியாமல் உள்ளது.

இந்தநிலையில் தற்போது கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய முழுவிபரங்களையும் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக அந்தந்த தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் காண்டிராக்ட் நிறுவனங்களுக்கு போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இதற்கிடையே இன்று காலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, குழந்தைகள் நல அலுவலர் ராம்கி உள்ளிட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள வடமாநில குழந்தைகளின் படிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்த விபரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.