தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு - செந்தில்பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம்

குதிரைபேர வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சட்டப்பேரவைத் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், அப்போது அவருக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி பணம் பேரம் பேசப்பட்டதாகவும், மறுத்தபோது மிரட்டல் விடுத்ததாகவும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரது தூண்டுதல் இருந்ததாகக் கூறி, அவர்கள்மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவைத் தொடர்ந்து செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் தலைமறைவாக இருந்தநிலையில் அவர்களை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கிய நிலையில், மறு உத்தரவு வரும்வரை மனுதாரர்கள் தினமும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

SCROLL FOR NEXT