தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து- சென்னையைச்சேர்ந்த கல்லூரி மாணவி பலி

விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

சென்னை அரும்பாக்கத்தில் இருந்து கல்லூரி மாணவர்களான 8 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 10 பேர் ஒரே காரில் இன்று காலை ஆந்திர மாநிலம் தடா நீர்வீழ்ச்சிக்கு புறப்பட்டனர். காரை மாணவர் ராஜமூர்த்தி (21) ஓட்டிச்சென்றார். அந்த கார், கவரைப்பேட்டை அருகே தச்சூரில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காரில் பயணம் செய்த கல்லூரி மாணவி திவ்யப்பிரியா (19) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடன் பயணம் செய்த மற்ற 9 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.