திருமாவளவன் 
தமிழக செய்திகள்

மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது - திருமாவளவன்

தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.

முதலமைச்சர் அறிவிப்பு

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

நிலப்பரப்பு மற்றும் அமைவிடம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.

எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையத் திட்டமும் அப்படிதான்.

அதேபோன்று, பட்டினம்பாக்கத்தில் 27 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் இசைவு கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், "இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை.

அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

SCROLL FOR NEXT