சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தே.மு.தி.க., ம.தி.மு.க. வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டதும், சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
அதனை தொடர்ந்து இன்று காலையில் மற்ற மாவட்டங்களில் உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அண்ணா அறிவாலயம் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
அதனை தொடர்ந்து இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அறிவாலயம் சென்று வாழ்த்து பெற்றனர்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, தனது கட்சி வேட்பாளர்களுடன் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சுதீஷ் எம்.பி. உடன் சென்றிருந்தார். பின்னர் பிரேமலதா நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த கூட்டணி மகத்தான வெற்றிபெற்று 200 தொகுதிகளுக்கு மேல் வென்று முதலமைச்சராக அண்ணன் ஸ்டாலின் ஆட்சி அமைப்பார் என்று சந்தோஷத்துடன் நாங்கள் சொல்கிறோம்’ என்றார்.
இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ம.தி.மு.க. வேட்பாளர்களுடன் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.