விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அரசு அனுமதியுடன் இயங்கிவந்த ஆலையில் வெடிவிபத்தின்போது 30க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. இதனால், இழப்பீடு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக இன்று உயர்நீதிமன்ற கிளையில் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் கட்டணார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் ஈஸ்வரியின் கணவர் முத்துமாணிக்கம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக பேசிய நீதிபதி தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார். பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்வது துரதிஷ்டவசமானது, பெண்களே பாதிக்கப்பட்டவரகளாக உள்ளனர்.
தொடர்ச்சியாக பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க அரசு என்ன செய்துக்கொண்டிருக்கிறது?
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பட்டாசு உற்பத்தி தொழிலை மேற்கொள்ள தடை விதிக்கலாமே? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூ.30 லட்சம் வரை காப்பீடு செய்த பின்னரே பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய வழக்கை ஜூன் 8ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்திவைத்தது.