கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வழக்கம் போல அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று காலை 10.30 மணிக்கு கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான ஊழியர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
மேலும் இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கும், வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயலிழப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாயுடன் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒவ்வொரு அறையாக அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடங்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், பழைய வாகனங்கள் உள்ளிட்ட வற்றிலும் போலீசார் சோதனை செய்தனர்.
சுமார் 2 மணி நேரமாக மேற்கொண்ட சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 34 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தற்போது 35-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.