தமிழக செய்திகள்

வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க பகல் கனவு காண்கிறது- கே.எஸ்.அழகிரி அறிக்கை

இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா?வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா? இதுவரை இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் மோடியின் கனவு கேள்விக்குறியாகவே இருக்க முடியும். ஆனால், அதற்குள்ளாக சமூக ஊடகத்தில் தவறான புள்ளி விவரத்தின் அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இதன்மூலம் ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது.

விநியோகம் அல்லது சமத்துவமற்ற குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும். இந்த குறியீடு 0-100 என உலகப் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனா மற்றும் ஜப்பானின் மதிப்பு 50 க்கும் மேல் உள்ளது. ஆனால், 21.9 மதிப்பு உள்ள இந்தியாவை விடப் பல மடங்கு அதிகமாக இந்த நாடுகளின் பொருளாதார பங்களிப்பு உள்ளது.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் ஏழைகள், பணக்காரர்கள் என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடுமா? பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையில் இணைக்கப்படாமலேயே மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. மோடி ஆட்சி என்பது யாருக்காக நடைபெறுகிறது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதேநேரத்தில் வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT