தமிழக செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு

தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணை நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 2.47 லட்சம் விளை நிலங்கள் பவானிசாகர் அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 105 அடி கொண்டது பவானிசாகர் அணை. அணையின் முழு நீர்த்தேக்க பரப்பு 30 சதுர மைல் ஆகும்.

கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு அதிக அளவில் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் எதிரொலியாக தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.

நீர்வரத்து

தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணை நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 59. 19 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 197 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி வீதம் என மொத்தம் 1255 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.45 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 20.20 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.26 அடியாகவும் சரிந்துள்ளது .