தமிழ்நாடு செய்திகள்

பழனியில் உலக சாதனைக்காக 1000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய உபசார விழா

ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டிய நிகழ்ச்சியானது தொடர்ந்து 20 நிமிடங்கள் நடைபெற்றது.

மாலை மலர்

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் பகுதியில் ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

64 உபசாரங்களில் கடவுளை நேரடியாக சென்றடையும் விதமாக பழனி முருகனுக்கு சுப்ரபாதம், திருப்புகழ், காவடிச்சிந்து ஆகியவை நாட்டியமாக ஆடி முருகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்து கொண்ட இந்த நாட்டிய நிகழ்ச்சியானது தொடர்ந்து 20 நிமிடங்கள் நடைபெற்றது.

நாட்டிய உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய நாட்டிய கலைஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. பரிசுகளை கலைமாமணி முரளிதரன் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுந்தரேச குருக்கள், ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.