தமிழக செய்திகள்

சீமான் வீட்டு பாதுகாவலர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

விசாரணைக்கு சென்ற காவலர்களை தாக்கியது மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டியது ஆகிய வழக்கில் இருவரும் கைது.ஒரு வழக்கில் இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் போலீசார் சம்மன் நோட்டீஸ் ஒட்டினர். இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி பகலில் ஒட்டி சென்றார்.

அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (பிப்ரவரி) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பாதுகாவலர் உள்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலாளிகள் மீது சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு, காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதில், ஒரு வழக்கில் மட்டும் இரு காவலாளிகளுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மற்றொரு வழக்கில் சீமான் வீட்டு பாதுகாவலர்கள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோரின் ஜாமின் மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.