யானைக்கு புல், தீவனங்களை கொடுத்து மகிழ்ந்த கிராம மக்கள் 
தமிழக செய்திகள்

பாச மழையில் நனைந்த குட்டி யானை: செல்பி எடுத்து மகிழும் கிராம மக்கள்... தாயுடன் சேர்க்க வனத்துறை தீவிரம்!

குட்டி யானையை அதன் தாயுடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும், தாய் யானை குட்டியை அதனுடன் சேர்ப்பதில்லை என கூறப்படுகிறது.

தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த குட்டி யானையை கிராம மக்கள் கொஞ்சி மகிழ்ந்தனர். அந்த குட்டியை தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

குட்டி யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது கிராம பகுதிகளுக்குள் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, தக்காளி, முட் டைகோஸ் உள்ளிட்ட விளை பயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்த காட்டு யானை கூட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று கடந்த ஒரு ஆண்டாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது. கிராம பகுதிகளில் சர்வ சாதாரணமாக சுற்றி வரும் இந்த குட்டி யானை கிராமத்தில் வாழும் பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. கிராம மக்கள் இந்தகுட் டியை பார்த்தவுடன் தங்களது செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது, அதற்கு உணவு கொடுத்து மகிழ்வது என வழக்கமாக நடந்து வருகிறது.

திரும்ப வந்துட்டான்...

இந்த நிலையில் இந்த குட்டி யானை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கிராம பகுதிகளுக்குள் வராமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மாரசந்திரம் என்ற கிராமத்திற்கு வந்து செல்கிறது. குட்டி யானையை பார்த்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அதனுடன் போட்டோ மற்றும் செல்பி எடுப்பதும் அதற்கு உணவு வழங்கி கொஞ்சி விளையாடுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். திரும்ப வந்துட்டான்யா... செல்லக்குட்டி என்று கிராம மக்கள் மகிழும் அதே நேரத்தில், இது குறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை கிராமத்தில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.

ஊருக்குள் வந்த குட்டி யானையுடன் விளையாடும் கிராம இளைஞர்கள்

குட்டி யானையை அதன் தாயுடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும், தாய் யானை குட்டியை அதனுடன் சேர்ப்பதில்லை என கூறப்படுகிறது. இருந்த போதிலும் வனத்துறையினர் விடாமுயற்சியாக குட்டியை அதன் தாயுடன் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கிராம மக்கள் மீண்டும் இந்த குட்டி யானை கிராமத்திற்குள் வரும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.