கடலூர்:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மாணவி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். அந்த மாணவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏற்கனவே புகார் செய்தார். மேலும் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.
அதில், நான் சிதம்பரம் வைப்புச்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பி.எச்.டி. படித்து வந்தேன். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நோயியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த ராஜா என்னுடன் பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டார். அதை அவர் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டி வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உதவி பேராசிரியர் ராஜா மீது சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழரசி வழக்குப்பதிவு செய்தார். மேலும் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
பின்னர் உதவி பேராசிரியர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 ஆண்டுகளுக்கு பின்னர் கொடுக்கப்பட்ட இப்புகாரின் உண்மைத்தன்மையை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அதே சமயம் இடைப்பட்ட காலத்திலும் பெண்ணுக்கு பேராசிரியர் தொந்தரவு கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.