தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 11,323 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. நெரிசலைத் தவிர்க்க 4 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2026-சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப். 21 முதல் ஏப். 23 பிற்பகல் வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 6,234 சிறப்புப் பேருந்துகள் மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக, 11,323 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையம்
வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையம்
கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
மாதவரம் பேருந்து நிலையம்
பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கும் மற்றும் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24×7) மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்.
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.