தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் திமுக மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
காரணம் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக, மாநிலத்தின் மிகப்பெரிய வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்துள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக மட்டும் தனித்து சுமார் 38% வாக்குகளைப் பெற்றது.
சமீபத்திய 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் கூட்டணி வலிமை போன்ற காரணங்களால் இம்முறையும் திமுகதான் வெல்லும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாவட்டவாரியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலம் சேர்க்கும் வகையில் திமுகவை ஆதரித்து டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்யவுள்ளார்.
கெஜ்ரிவால் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கெஜ்ரிவாலின் வருகை திமுகவின் பிரச்சாரத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெஜ்ரிவால் இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.