'சட்டசபை தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப்பணியாளர்கள் மற்றும் அத்தொகுதி வாக்காளர்கள் அல்லாதோர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்' என்று தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதனையொட்டி இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், சில விதிமுறைகள் செயலில் இருக்கும்.
குறிப்பாக, தேர்தல் தொடர்பாக எந்த வித பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட எந்த சாதனம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.
குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
தொகுதியைவிட்டே வெளியேற வேண்டும்.
பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு, பிற கேளிக்கை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த கூடாது.
அதன் மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விவகாரத்தையும், பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் 2 விதிமுறைகள் மீறப்பட்டால் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநி தித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா? என்பதை கண்டறியப்படும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், இன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும். வாக்காளர்களை வாக்குச்சாவ டிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.