தமிழக செய்திகள்

தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!

பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது.

சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!

ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.