திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சண்முகவேலு குக்கர் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எரிசனம்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. கற்பழிப்பு படுகொலை அதிகரித்துள்ளது. அதற்கு சாட்சி திமுகவில் கிளை முதல் மேல் மட்டம் வரை மக்கள் நலனுக்கு எதிராக உள்ளனர். திமுக வேட்பாளர்களை மூன்று பேர் தேர்ந்தெடுக்கின்றனர். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகியோரை காக்கா பிடித்தால் தான் பொறுப்பும் சீட்டும் கிடைக்கும்.
ஜனநாயகம் இல்லாத கட்சி திமுக. திடீரென உதயநிதி துணை முதல்வர் ஆனது போன்று இன்ப நிதியை அடுத்த தேர்தலில் எம்எல்ஏவாக கூட ஆக்குவார்கள். மாற்றம் வேண்டும் என்றால் எல்லாம் மாற வேண்டும். திமுகவில் தவறான நபர்கள் அதிக அளவில் உள்ளனர். கட்சியும் மோசம் ஆட்சியும் மோசம். மே 4ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடியார் முதல்வர் ஆவார். அதிமுக -பாஜக கூட்டணி இணைந்து சிறப்பான ஆட்சியை தமிழகத்திற்கு அளிக்கும். அதன் பின்பு அப்பர் அமராவதி அணை திட்டம், ஆனைமலை நல்லாறு திட்டம் கொண்டுவரப்படும். இந்த திட்டங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அரசோடு மாநில அரசு இணைந்தால் தான் சாத்தியமாகும் என பேசினார்.