அருணா கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் தொட்டாரெட்டி குப்பம், வெள்ளக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நகரி அருகே உள்ள நின்றறை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் மனைவி அருணா (வயது 43). இவர் சம்பவத்தன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள வந்தார்.
பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டார். இந்த நிலையில் அவர் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம் அருகெ எவயல்வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் திராவகம் ஊற்றி சிதைக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அருணாவின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் அப்படியே இருந்தன.
இதனால் இது திருட்டுக்காக நடந்த கொலை அல்ல என்பது தெரியவந்தது. மேலும், இது பாலியல் வன்கொடுமையால் நடந்த கொலையும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் அருணாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, அவரது அடையாளத்தை அழிப்பதற்காக முகத்தில் ஆசிட் அல்லது சிதைவை ஏற்படுத்தும் வேதிப்பொருளை ஊற்றி உள்ளனர்.
அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட அருணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கொலையாளிகளை பிடிக்கவும், கொலை பற்றி துப்பு துலக்கவும் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. வினோத் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருணாவின் பிணத்திற்கு அருகில் ஒரு செல்போன் கிடந்தது. அதில் பதிவான அழைப்பு விவரங்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு, அவரது உறவினர்கள் மற்றும் சில முக்கிய சந்தேக நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருணா கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் தொட்டாரெட்டி குப்பம், வெள்ளக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அருணா திருமண வீட்டிலிருந்து கிளம்பியது முதல் கொலை நடக்கும் வரை யார் யாரைச் சந்தித்தார் என்பதை இதன் மூலம் கண்டறிய முயல்கின்றனர்.
அருணாவின் முகத்தில் ஊற்றப்பட்டது ஆசிட் மட்டும்தானா அல்லது அடையாளம் தெரியாமல் இருக்க கல் உப்பு மற்றும் பிற வேதிப்பொருட்களைக் கலந்து ஊற்றினார்களா என்பது குறித்தும், அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே உடல் வீசப்பட்டதா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வரப்பட்டாரா? என்றும் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே அவரது செல்போன் அழைப்பு பதிவான விவரங்களை வைத்து ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.