தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளரை ஆதரித்து இண்டூர், நல்லம்பள்ளியில் நேற்று இரவு பா.ம.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம். தற்போது ஆண்டு வரும் தி.மு.க. அரசிடம் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம்.
நானே நேரில் சென்று முதலமைச்சரிடம் இந்த திட்டத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினேன். ஆனால் இதுபற்றி அவர்கள் அக்கறை எடுத்து கொள்ளவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் நிச்சயம் ஆட்சி மலரும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது உறுதி.
இந்த புதிய ஆட்சி அமைந்த உடன் காவிரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும். இதே போன்று இந்த மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசன திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
தமிழகத்துக்குள் பா.ஜ.க. வந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த தேர்தல் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் அல்ல. உங்களுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் போட்டி.
தற்போது தி.மு.க.வினர் ரூ.8 ஆயிரம் போலி கூப்பன்களை வழங்கி வருகின்றனர். இது ஏமாற்று வேவை. மக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம்.
கடந்த 5 ஆண்டு காலத்தில் என்ன திட்டத்தை நிறைவேற்றினீர்கள். இதுபோன்ற போலி கூப்பன் வழங்காததால் ஒரு பெண் தற்கொலை செய்து இருக்கிறார். அதற்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் உங்களது வங்கி கணக்கில் வந்து சேரும். வன்னியர்களுக்கு 10.3 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி, அதனை கெடுத்தவர் மு.க.ஸ்டாலின். இதனை யாரும் மறக்க மாட்டார்கள். இவர்களுக்கு வருகிற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.