சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
உலகை உயர்த்த உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட நாளான மே நாளைக் கொண்டாடும் பாட்டாளிகள் அனைவருக்கும் தொழிலாளர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.
உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை நியதி. ஆனால், களச்சூழல் அத்தகையதாக இல்லை. உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது; பெரு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர்களின் நிலை மட்டும் மாறவில்லை. அவர்கள் இன்னும் சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். இன்னும் கேட்டால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியத் தேவை 19-ஆம் நூற்றாண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ, அதை விட அதிகத் தேவை இன்றைக்கு இருக்கிறது. உலகம் பல்வேறு தளைகளிலிருந்து விடுதலை பெற்று வரும் நிலையில் தொழிலாளர்களின் விலங்கு மட்டும் உடையவில்லை.
எந்த ஒரு இன்னலுக்கும் முடிவு உண்டு. அதேபோல், உழைக்கும் பாட்டாளிகள் மீது கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்ட சுரண்டலுக்கும் முடிவு உண்டு. அந்த முடிவு இப்போது நெருங்கி விட்டது என்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணி, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தையும் வென்றெடுத்துக் கொடுப்பதன் மூலம் சுரண்டல்வாதிகளின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டி, பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம் என்று கூறி, உலகெங்கும் வாழும் பாட்டாளிகளுக்கு மீண்டும் ஒரு முறை மே நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.