அன்புமணி ராமதாஸ்
தமிழக செய்திகள்

25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்க: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் வாரியத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். வாழ்க்கையின் பெரும்பகுதியை மின்சார வாரியத்திலேயே கழித்து விட்ட நிலையில், தங்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதை முந்தைய அரசுகள் ஏற்கவில்லை.

ஒப்பந்த ஊழியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தங்களுக்கு பணி நிலைப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், மின்சாரத்துறை அமைச்சரோ, அடுத்த 6 அல்லது 7 மாதங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரந்தரத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். பணி நிலைப்புக்காக கோரிக்கை விடுத்தால், பணி நீக்கத்திற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுவதை எதிர்த்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் ஜூன் 22 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரத் துறை அமைச்சரை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடந்த 18-ஆம் தேதி மதுரையில் சந்தித்து பேச்சு நடத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து அமைச்சர் உத்தரவாதம் அளிக்கவில்லை.

மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை விதிகளை பின்பற்றி பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பத்தாண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பணி நிலைப்பு பெற தகுதி பெற்ற கடலூர் மாவட்ட மின் வாரிய ஊழியர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளரிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு முறையிட்டனர்.

அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரியத்திற்கு 2004 முதல் 2007 வரை பல்வேறு கட்டங்களாக ஆணையிட்டனர். ஆனால், அந்த ஆணையை அரசு செயல்படுத்தாததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில் 2015-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் 480 நாள்கள் தொடர்ந்து பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசுக்கு ஆணையிட்டது.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு

அதை எதிர்த்து மின்வாரியம் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அங்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அந்த வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரியத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என மீண்டும் ஆணையிட்டது. ஆனால், அதன்பின் 11 ஆண்டுகளாகியும் அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலனில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறை இவ்வளவு தான்.

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், தவெக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முயல்பது நியாயமல்ல. தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் ஒப்பந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை மின்துறை அமைச்சர் அல்லது மின் துறை செயலாளர் சந்தித்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு மாதமாக நீடிக்கும் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.